மீள்குடியேறிய மக்களை தன்னிறைவை நோக்கி வழிப்படுத்துவோம்
“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.” – திருவள்ளுவர்
உலகம் எத்தனை தொழில்களில் சுழன்றாலும், இறுதியில் அது விவசாயத்தையே சார்ந்து நிற்கிறது என்ற திருவள்ளுவரின் ஆழமான சிந்தனையை வழிகாட்டியாகக் கொண்டு, விவசாய நடவடிக்கைகளை எமது மக்களிடையே ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் பணியில் புதிய வாழ்வு நிறுவனம் பெருமையுடன் கைகோர்த்து நிற்கிறது.
அந்த வகையில், மீள்குடியேறிய மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், குடிநீர் வசதி, கல்வி, விவசாயம் மற்றும் சுயதொழில் மேம்பாடு போன்ற துறைகளில் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு, அவர்களை தன்னிறைவு நோக்கி முன்னேற்றுவதே எமது முக்கிய நோக்கமாகும்.
அதன் பலனாக, தம்பி பார்த்தீபன் மேற்கொண்டுள்ள காய்கறி விவசாயம் இன்று வெற்றிகரமாக வளர்ச்சி பெற்று, அவரது விளைபொருட்கள் சந்தைக்குச் செல்லத் தயாராகியுள்ளன. இந்த முன்னேற்றத்தை காண்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
மேலும், தையிட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் அன்பார்ந்த உறவுகளுக்கு எமது பணிவான வேண்டுகோள்:
உங்களிடம் தற்போது பயிரிடப்படாமல் இருக்கும் காணிகள் இருந்தால், அவற்றை சட்டபூர்வமான குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு வழங்க முன்வாருங்கள். இதன் மூலம் உங்கள் காணிகள் வளம் பெறுவதோடு, பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இது கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் ஒரு சிறந்த பங்களிப்பாக அமையும்.







Previous Post
Next Post
