தையல் தொழிலை மேலும் விரிவுபடுத்த உதவி !
மனிதநேயத்தாலும், கடின உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் எமது பெண்களின் வாழ்க்கைப் பயணமானது பல சவால்களையும் வலிகளையும் உள்ளடக்கியது, அந்தவகையில் செஞ்சோலை வளாகம், வள்ளிபுனம், இடைக்காடு பகுதியில் முத்துமாரியம்மன் தையலகத்தை நடாத்திவரும், திருமதி இலங்கைதாசன் ராதிகா அவர்கள், இறுதிக்கட்ட யுத்த காலத்தின் எறிகணைவீச்சில் தனது கணவரையும், தனது முதல்பெண்குழந்தையையும் தன்கண்முன்னே இழந்த இவர், வாழ்க்கையின் மிகக் கடுமையான துயரங்களையும் சவால்களையும் தாண்டி, மீதமுள்ள தனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனம் தளராமல் மீண்டும் எழுந்து நிற்கவேண்டும் என்று அவரைத்தூண்டிய பொறுப்பு, கடமை உணர்வானது இன்று அவரை ஒரு தையலகத்திற்கு பொறுப்பானவராக மாற்றியதுடன் தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட 4 பெண்களுக்கும் தொழில்வாய்ப்பைக்கொடுத்து ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றார் என்றால் அது எமதுபெண்களால் மட்டுமே முடியும் .
கால்துடைப்பங்கள், பாடசாலைச் சீருடைகள், பெண்களுக்கான ஆடைகளைத் தைத்து , மன்னார், வவுனியா ,யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற இடங்களிற்கு தனது உற்பத்திகளை விநியோகித்து வரும் இவர், தனது தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும், அதற்குத் தேவையான வெட்டும் இயந்திரத்தையும், மற்றும் துணிக்கொள்வனவு பற்றியும் எமக்கு தெரிவித்திருந்தார்.
அவரின்வேண்டுகோளுக்கு இணங்க புதிய வாழ்வு நிறுவனமானது அவருக்குத் தேவையான துணி கொள்வனவிற்கான நிதியுதவியையும், வெட்டும் இயந்திரத்திற்கான நிதியையும் வழங்கியதனூடாக திருமதி, இ. ராதிகாவின் வளர்ச்சிக்கு எம்மால் கைகொடுக்க முடிந்தமையைஇட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். அவரின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எம்மாலான உதவிகளை வளங்க ஏற்பாடுகள் செய்துவருகின்றோம். இவர்போன்ற உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புக்கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
“வலிநிறைந்த எம்மவர் வாழ்க்கைக்கு வழிகாட்ட எம்மோடு இணைந்திருங்கள் .
துணிச்சலுடன் போராடி, தன்னையும் பிறரையும் உயர்த்திக் கொண்டு செல்லும் இவரது முயற்சிக்கு புதிய வாழ்வு நிறுவனம் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துநிற்கின்றது .





Previous Post
Next Post
